யாழ். தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : அமைச்சர் அறிவிப்பு
யாழ்ப்பாணம் - தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு அதனை அளவிட்டு காணி உரிமையாளர்களுக்கு மீள கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நேற்று (27) நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் காணி விடுவிப்பு பிரச்சினை பிரதானமான ஒரு பிரச்சினையாக காணப்படுகிறது. அது தொடர்பாக எமது அரசாங்கத்தாலும் கூட நாம் வாக்குறுதி அளித்தோம்.
சுனில் செனவி தலைமையிலான குழு
தையிட்டி விகாரை பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் அது தீர்க்கப்பட வேண்டும். அதனை அண்டியிருக்கின்ற அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதிலே மாற்றுக் கருத்து இல்லை. இருந்தபோதிலும் கூட அதில் நூற்றுக்கு 80 வீதமான செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளோம்.

அந்தக் காணி உரிமையாளர்களை இனம் கண்டு கொண்டிருக்கிறோம். அந்த காணிகளை இனம் கண்டு அளவிட்டு மீள கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
இது தொடர்பில் பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி தலைமையிலான குழுவில் நானும், நீதி அமைச்சர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அது சார்ந்த அனைத்து அதிகாரிகளும், விகாராதிபதியும் இருக்கிறார்கள்.
அனைவருடனும் இணைந்து சுமுகமான முடிவை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். மிக விரைவாக அதனைச் செய்வோம்.
இராணுவ வைத்தியசாலை
அதேபோன்று விஷேடமாக எதிர்வரும் காலங்களில் பலாலி கிழக்கு பக்கம் பிரதேசம் முழுவதையும் முழுமையாக விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அதில் ஒரு சில பிரச்சினை இருக்கிறது. அந்த பிரச்சினை தீர்ந்து எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் பெருவாரியான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் எடுப்போம்.
அந்த வகையில் வலி வடக்கு பகுதியில் கட்டப்பட்டு வருகின்ற இராணுவ வைத்தியசாலை தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அது சம்பந்தமாக பேசுவதற்கும் ஜனாதிபதியினுடைய கவனத்திற்கும் பாதுகாப்புச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்.
மேலும் அதை நிறுத்துவதா? அதைக் கட்டி மக்களிடம் எதிர்காலத்தில் கையளிப்பது என்பது தொடர்பாக பேச வேண்டும். குறித்த நில உரிமையாளர்களுடம் நாம் பேச வேண்டும்” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |