நாட்டின் இறைமை குழிதோண்டி புதைக்கப்படுவதை தவிர்க்க முடியாது! ஜே.வி.பி சீற்றம்
எமது நாட்டினுடைய இறைமை குழிதோண்டி புதைக்கப்படுவதை தவிர்க்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சூழ்நிலை காரணமாக மக்கள் அரசியல் சூதாட்டம் பற்றி சிந்திக்க முடியாத நிலையில் உள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளது. அவசர அவசரமாக இவ்வாறான ஒரு சூழலிலேயே சீனாவிற்கு நகரத்தை முற்றுமுழுதாக வழங்கி சீனாவின் பிராந்தியமாக மாற்றுகின்ற நடவடிக்கையை எடுப்பது ஏன்?
எங்கள் எல்லோருக்குமே தெரியும் இந்த சட்டமூலம் என்பது அல்லது இவ்வாறான ஒரு சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் அல்லது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமாக இருந்தால் எமது நாட்டினுடைய இறைமை குழிதோண்டி புதைக்கப்படுவதை தவிர்க்க முடியாது.
அது முற்று முழுதாக சீனாவுடைய பிராந்தியமாக எமது நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு எமது நகரசபைக்கு உட்படாத எமது நிதி சட்டங்களுக்கு உட்படாத எமது கணக்காய்வாளர் சட்டத்திற்கும் அல்லது கணக்காய்வாளர் அறிவிக்கப்படாத எங்களது முதலீட்டு சபை சட்டத்துக்கு உட்படாத ஒரு தனிநாட்டை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கையே இன்றைக்கு இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.