நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்!
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டமானது எதிர்வரும் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையில், இன்று (10) முதல் நாடாளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதிபரினால் வரவு - செலவுத்திட்ட உரை முன்வைக்கப்படவிருப்பதனால் கடந்த ஆண்டுகளைப் போல இம்முறையும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (09) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, இன்று (10) நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள், ஆடை அலுமாரிகள் உட்பட நாடாளுமன்றத்தின் முழு கட்டடமும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் எனவும் சபாநாயகர் கூறினார்.
வாகனத் தரிப்பிடம் மூடப்படவுள்ளது
அதேவேளை, வரவு - செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் 13ஆம் திகதியன்று நாடாளுமன்ற வாகனத் தரிப்பிடம் மூடப்படவுள்ளதுடன் உறுப்பினர்கள் வருகை தரும் வாகனங்கள் உரிய தரிப்பிடத்துக்கு அனுப்பிவைக்கப்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தவிரவும், அன்றையதினம் நாடாளுமன்றத்திற்கு வருகைதரும் உறுப்பினர்கள் முடிந்தவரை தமது சாரதிகளுடன் வருகைதருவது உத்தமமானது எனவும் சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
போக்குவரத்து ஏற்பாடுகள்
மேலும், அன்றையதினம் போக்குவரத்துக்குப் பொறுப்பான காவல்துறையினர் மற்றும் அருகிலுள்ள காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர் இணைந்து போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 8 மணி நேரம் முன்