மேற்குலக நாடுகளின் தந்திரத்திற்குள் நாட்டை சிக்க வைக்கும் பசிலின் திட்டம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உச்சமடைய செய்து, நாடு பாரிய நெருக்கடிக்குள் விழுந்த பின்னர், மேற்குலக நாடுகளின் தந்திரத்திற்குள் நாட்டை சிக்க வைப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பதே நிதியமைச்சரின் தேவையாக இருக்கின்றது.
மேலும் நெருக்கடிகள் உச்சமடைவதையே நிதியமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்பார்த்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ச உட்பட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்றில் இன்று முன்னிலையான பின்னர், நீதிமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
மேற்குலக நாடுகளின் தந்திரத்திற்குள் நாட்டை சிக்க வைப்பதைக் கண்டும் காணாதது போல் இருக்க எமக்கு முடியாது. நாட்டில் தற்போது அந்நிய செலாவணி பிரச்சினையே இருக்கின்றது.
எரிபொருள் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்ய கடன் பத்திரங்களை வெளியிட முடியாமல் இருக்கின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அந்நிய செலாவணி நெருக்கடியுடன் நாட்டுக்கு ஏற்பட போகும் நிலைமை பற்றி நாங்கள் பேசினோம்.
எம்மை பதவிகளில் இருந்து நீக்கி விட்டு, அந்நிய செலாவணியை சம்பாதிக்க முடியும் என்று அரசாங்கம் எண்ணி இருக்கலாம். அந்நிய செலாவணியை சம்பாதித்து இருந்தால், இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது.
5 ஆம் திகதியின் பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனக் கூறினர். இன்றும் மின்சாரம் துண்டிப்பு தொடர்பான திட்டத்தை அறிவித்துள்ளனர்.
எரிவாயு பிரச்சினை மேலும் உக்கிரமடைந்து வருகிறது. நீண்டகாலத்தை கணக்கிட்டு எடுக்க வேண்டிய முடிவுகளை எடுக்காததே இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன எனவும் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.