இரு குழுக்களுக்கிடையில் மோதல்! ஒருவர் பலி
மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காங்கேயனோடையில் இருவருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவர் மற்றவரை தாக்கியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த நபர் காத்தான்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
காங்கேயனோடை தடாகத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் காங்கேயனோடை பகுதியைச் சேர்ந்த 43 வயதான லெப்பை மொஹமட் இல்பான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு சென்று உயிரிழந்தவரின் சடலத்தை பார்வையிட்டார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, காத்தான்குடி காவல் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
உயிரிழந்தவர் இதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர் எனவும் அவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








