சிறிலங்காவை கடன் வலையில் சிக்க வைத்துள்ள சீனா- பாரிய குற்றச்சாட்டுடன் பகிரங்க கடிதம்!
உலக வல்லரசாக மாறுவதற்கான சீனாவின் பயணத்தின் போர்க்களங்களில் ஒன்றாக சிறிலங்காவும் மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் 45 விடயங்களை சுட்டிக்காட்டி சீன அரச தலைவர் ஷி ஜின்பிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமே 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் அதிக வட்டி விகிதத்தில் இருந்து சீனாவுக்கு பலனளித்த ஒரேயொரு திட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிறிலங்காவிற்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவு இனி நேர்மையானதும் உண்மையானதுமாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை மின் உற்பத்தி திட்டத்தை விட ஏனைய திட்டங்கள் அனைத்தும் வெறும் வீண்செலவுகள் எனவும், சீனா சிறிலங்காவை பாரிய கடன் வலையில் சிக்க வைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஜனநாயக முறைமையின் கீழ் நீக்கப்படும் என்றும் இதன்போது கடந்த 15 வருட காலத்தில் சர்வதேச நாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் மீண்டும் ஆராயப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நடைபெறும் தேர்தல்கள் மக்களின் கருத்துக்கணிப்புடனேயே நடைபெறும் என்றும் இதன் போது ஊழல் மோசடிகள் காணப்படும் அனைத்து உடன்படிக்கைகளும் இரத்துச் செய்யப்படும் என்றும் அவர் சீன அரச தலைவருக்கு அறிவித்துள்ளார்.