சாட்சியங்களை மறைப்பதாக குற்றம் சுமத்திய பேராயர்- நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஆணைக்குழு பதிவு செய்த சாட்சியங்கள் அடங்கிய 88 பாகங்களை கொண்ட முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவரின் சட்டப் பணிப்பாளர் ஹரிகுப்த ரோஹனதீர, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் அவற்றை இன்று கையளித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்திடம் வழங்கப்பட்டதுடன் சட்ட ரீதியான காரணங்களின் அடிப்படையில், அவற்றில் உள்ள சாட்சியங்கள் மற்றும் அடையாளங்கள் வெளியாகவில்லை.
ஆணைக்குழு கண்டறிந்த விடயங்கள் மக்கள் அறிய வேண்டும் என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேலதிக பரிசீலனைக்காக கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய அறிக்கையின் அனைத்து பாகங்களும் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என அரச தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள சாட்சியங்களை அரசாங்கமும், சட்டமா அதிபர் திணைக்களமும் மறைத்து வைத்துள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தி இருந்தார்.
ஆணைக்குழுவின் அறிக்கையின் ஏனைய பாகங்களை வழங்குமாறு கோரி கடிதம் அனுப்பி இருந்த போதிலும் அதற்கு பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையிலேயே அறிக்கையின் அனைத்து பாகங்களும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.