இலங்கையில் முட்டைகளுக்கு சூட்டப்பட்ட பட்டப்பெயர்!
“அவன்கார்ட் கனரக ஆயுதம்” என முட்டைக்கு பட்டப்பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்து சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டின் மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமையாலேயே முட்டைக்கு இப்படியான பட்டப்பெயரை சமூக வலைத்தள பயனாளிகள் சூட்டியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சமூக வலைத்தள பயனர்கள் கோழி முட்டைக்கு புதிய பட்டப் பெயர் ஒன்றை சூட்டியுள்ளனர். “அவன்கார்ட் கனரக ஆயுதம்” என்றே இவர்கள் முட்டைக்கு பட்டப்பெயரை சூட்டியுள்ளனர்.
“அவன்கார்ட் கனரக ஆயுதம்” தாருங்கள் என சிலர் கடைகளில் கேட்கும் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. முதலாளி 10 “அவன்கார்ட் கனரக ஆயுதங்களை தாருங்கள்” என சிங்களத்தில் எழுதப்பட்ட புகைப்பட பதிவுளை சமூக ஊடகங்களில் காணக் கூடியதாக உள்ளது.
இந்த தாக்குதலை நடத்த வந்த இரண்டு பேரை மாநாட்டில் கலந்துக்கொள்ள வந்தவர்கள் பிடித்தனர். அவர்கள் தாம் அவன்கார்ட் நிறுவனத்தில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களாக கடமையாற்றுவதாக கூறியிருந்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்திற்கு மிக நெருக்கமான நபராக கருதப்படும் நிஷ்சங்க சேனாதிபதியே அவன்கார்ட் நிறுவனத்தின் உரிமையாளராவார். முன்னாள் இராணுவ அதிகாரியான இவர், தனது நிறுவனத்தில் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றவர்களை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களாக பணிக்கு அமர்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனத்தை இராணுவ துணைப்படையினர் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.