கூட்டமைப்பினை நம்பி பயனில்லை - முசலி பிரதேச மக்களின் அதிரடி முடிவு..!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் , தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை தெரிவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக இம்முறை இலங்கை தமிழரசு கட்சி வடக்கு,கிழக்கில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கி தேர்தலில் போட்டியிட உள்ளன.
இந்நிலையில் கட்சிகளுக்குள் ஒற்றுமையில்லாத நிலையில் இனியும் அவர்களை நம்பி பயனில்லை என்ற காரணத்தினால் மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச சபை மற்றும் முசலி பிரதேச சபைகளுக்கு சுயேட்சையாக போட்டியிட இன்று திங்கட்கிழமை(16) காலை கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
சுயேட்சை வேட்பாளர்
மன்னார் பிரதேச சபையில் போட்டியிட தலைமன்னார் மேற்கைச் சேர்ந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றினைந்து அதிரடியாக முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளனர்.
இதற்கமைய தங்களது கிராம மக்கள் சார்பாக சுயேட்சை வேட்பாளர் ஒருவரை களமிறக்க தலைமன்னார் மேற்கைச் சேர்ந்த மக்கள் தீர்மானித்துள்ளனர்.
இனியும்,அரசியல் கட்சிகளை நம்பி எந்த பயனும் இல்லை என்ற காரணத்தினாலேயே தற்போது இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
கூட்டமைப்பில் ஏற்பட்ட பிரிவு
இந்த நிலையில் தலைமன்னார் மேற்கைச் சேர்ந்த குழு ஒன்று இன்றைய தினம் சுயேட்சையாக களமிறங்குவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை முசலி பிரதேச சபைக்கு சுயேட்சையாக போட்டியிட மன்னார் தேர்தல் திணைக்களத்தில் குறித்த குழு கட்டுப்பணம் செழுத்தியுள்ளது.
மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்ட பிரிவு காரணமாக தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.



கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 9 மணி நேரம் முன்
