எரிவாயு பெறுவதற்காக வீதியில் மக்கள்- அமைச்சுப் பதவிக்காக ரணிலின் வாசத்தலம் முன்பாக பாய்போட்டு படுத்திருக்கும் எம்.பிக்கள்!
மட்டக்களப்பு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சு பதவி தங்களுக்கு வழங்கக் கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வாசத்தலம் முன்பாக பாய் போட்டு படுத்துக் கிடப்பதாக சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பில் எரிவாயு பெற்றுக்கொள்வதற்காக வீதியில் காத்திருக்கும் மக்களை சந்தித்து பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிவாயுவுக்காக காத்திருக்கும் மக்கள்
இலங்கையில், தற்போதைக்கு எந்தவிதமான எரிவாயு இறக்குமதியும் இல்லை எதிர்வரும் நான்காம் திகதிக்கு பின்னர் தான் இலங்கைக்கு எரிவாயு கப்பல் வரக்கூடியதாக இருப்பதாக அறிய முடிகின்றது.
இரண்டு மாதங்களுக்கு ஒரு லட்சம் எரிவாயுக்கள் மாவட்டத்துக்கு தேவைப்படுகின்ற போதும் வெறுமனே 15,000 எரிவாயுகளை கொண்டு வந்து என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேல்மாகாணத்திற்கு அதிகளவு எரிவாயு
குறிப்பாக மேல் மாகாணத்தில் அதிகளவான எரிவாயுக்கள் வழங்கி வைக்கப்படுவதாகவும் அங்குள்ள அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைப்பதற்காக பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடி குறித்த தீர்வுகளை பெற்றுக் கொள்கின்றார்கள்.
ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அது முற்றிலும் வித்தியாசமான முறையில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே வீதியில் எரிவாயுவுக்காக காத்திருப்பவர்கள் வீதிகளை மறித்து போராட்டம் நடத்துவதன் மூலம் பாதிக்கப்படப்போவது மாவட்டத்தை சேர்ந்த எமது மக்களே.
அமைச்சுக்பதவிக்காக தவம்கிடக்கும் எம்.பி
ஆகவே இவ்வாறான நிலைமையை கருத்தில் கொண்டு செயற்படுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக மட்டக்களப்பில் உள்ள இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பாக எங்கேயாவது கதைப்பதை காணவும் இல்லை.
ஆனால் இன்று மக்கள் எரிவாயுக்காக வீதிகளில் பாய் போட்டு படுத்து உறங்கும் நிலையில் இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வாசலுக்கு முன்பாக தங்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கக் கோரி பாய் போட்டு படுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் மக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.