இலங்கையில் இன்டர்போலின் அதிரடி நடவடிக்கை- மேலும் பல உண்மைகள் வெளியாகலாம்!
இலங்கையில் தீவிரவாத சந்தேக நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக “இன்டர்போல்” இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், தீவிரவாதிகள் என சந்தேகத்துக்குரியவர்களும் வெளிநாடுகளின் தீவிரவாதிகளும் அடங்குவதாக இன்டர்போல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சர்வதேச காவல்துறை அமைப்பான “இன்டர்போல்” இலங்கையின் காவல்துறையினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒபரேஷன் ஃப்ளைகேட்சர் II (Operation Flycatcher II) என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட (2021 நவம்பர் 8-12) ஐந்து நாள் நடவடிக்கையின் போதே இந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், விரைவில் உலகளவில் மேலும் பல கைதுகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதாக இன்டர்போல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு முன்னர், இலங்கையின் காவல்துறையினர் எல்லை மற்றும் குடிவரவு முகவர் நிலைய அதிகாரிகள் மத்தியில் தடயவியல் அடையாள நுட்பங்கள் மற்றும் திறன்கள் தொடர்பான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இன்டர்போலின் தரவுத்தளங்களில் சுமார் 135,000 வெளிநாட்டுத் தீவிரவாதிகள் பற்றிய விபரங்கள் உள்ளதாக அந்த அமைப்பின் பயங்கரவாத எதிர்ப்பு இயக்குனர் கிரிகோரி ஹிண்ட்ஸ் (Gregory Hinds) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கையில் பயணிக்கும் தீவிரவாத சந்தேக நபர்களை, கண்டறிவதற்காக தேசிய ரீதியில் செயற்படும் விதத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, இன்டர்போலுடன் இணைந்த நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய தலைமை காவல்துறை பரிசோதகர் லக்ஷ்மன் ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளின் போது, கொழும்பில் உள்ள இலங்கைக்கான இன்டர்போல் தேசிய மத்திய பணியகம் இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை (சிஐடி) குற்றப் பதிவுத் துறை (CRD) சிஐடியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சிறப்பு அதிரடிப்படை அரச புலனாய்வு சேவை (SIS) என்பன இணைந்துக்கொண்டன.