அனைத்துக் குப்பைகளையும் நல்லாட்சி மீது கொட்டாதீர்கள்- கடுமையாக சாடிய மைத்திரி!
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது அனைத்து குப்பைகளையும் தூக்கி எறிய வேண்டாம் என சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ( Maithripala Srisena) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்றிரவு நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
எனது அரசாங்கம் எத்தனை சட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றது?. செய்தவை என்ன? என்பதை பற்றி தற்போது எவரும் பேசுவதில்லை.
நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கு செய்தவற்றை விளக்கமாக கூற தனியான கருத்தரங்கை கூட நடத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நல்லாட்சி, நல்லாட்சி எனக் கூறி கற்களை மாத்திரம் எறிந்து வருகின்றனர். தேர்தல் வரைப்படத்தை சுருட்டியது நல்லாட்சி அரசாங்கம் அல்ல, ஜே.ஆர். ஜெயவர்தன.
நான் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் நாட்டுக்கு ஜனநாயகத்தை வழங்கியவன். உலகில் எந்த தலைவர் தனக்காக அதிகாரங்களை குறைத்துக்கொண்டார் எனவும் மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
