மிரிஹானை போராட்டம் தணிவதற்குள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் ஆரம்பமான போராட்டங்கள்!
மதுரங்குளிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம் - சிலாபம் வீதி தடைப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வீதியை மறித்து எரிபொருள் கோரியே இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன் காரணமாக புத்தளம் - சிலாபம் வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், அதனை அண்மித்த பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதுரங்குளி காவல்துறையினர் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
அதேவேளை அரச குடும்பநல சுகாதார சேவை சங்க உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக மருதானை டீன்ஸ் வீதியில், சுகாதார அமைச்சுக்கு முன்னால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகால சேவை காலத்தை நிறைவுசெய்யும் குடும்பநல சுகாதர சேவை உத்தியோகத்தர்களை, விசேட தரத்திற்கு, தரமுயர்த்துவதைக் கைவிடுவதற்கு சுகாதார அமைச்சு மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.