சிரேஷ்ட ஊடகவியலாளர் வீட்டின் மீதான தாக்குதல்- களமிறங்கியுள்ள விசேட விசாரணைக் குழுக்கள்!
சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் இல்லத்துக்கு தாக்குதல் நடத்திய குழுவினர், சிற்றூர்ந்து மற்றும் உந்துருளி என்பனவற்றில் பிரவேசித்து மீளத் திரும்பிய வீதிகள் குறித்த தகவல்களைக் கண்டறிய சி.சி.ரி.வி காணொளி காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்துவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வாகனம் ஸ்பேசியா வகை சிற்றூர்ந்தை ஒத்ததாக உள்ளதென, சி.சி.ரி.வி காணொளிக் காட்சிகளை ஆராய்ந்ததன் அடிப்படையில் காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த சி.சி.ரி.வி காணொளிக் காட்சிகள், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. சம்பவம் தொடர்பில், 26 சி.சி.ரி.வி காணொளிக் காட்சிகளை, விசாரணை அதிகாரிகள் நேற்று வரையில் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
குறித்த குழுவினர் தாக்குதல் நடத்துவதற்காக, கொழும்பிலிருந்து பிலியந்தலை சந்திவரை பயணித்துள்ளமை இதனூடாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் பயணித்த சிற்றூர்ந்து பிலியந்தலை விகாரைக்கு அருகில் மீண்டும் திரும்பி ஜாலியகொட சந்தி ஊடாக பயணிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட 60 பேர் அடங்கிய 9 விசேட விசாரணை குழுக்கள் தொடர்ந்தும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.