மக்கள் கிளர்ச்சியின் போது கைப்பற்றப்பட்ட தேசிய தொலைக்காட்சி - தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!
இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி கூட்டுத்தாபனத்தை கடந்த 9 ஆம் திகதி போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கைப்பற்றியிருந்தனர்.
அவ்வாறு தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் இருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு காவல்துறை தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கைது செய்ய உத்தரவு

அதற்கமைய, தொலைக்காட்சி வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்ற நபர்களை வீடியோ காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு கைது செய்யுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நேரலை நிகழ்ச்சியில் இணைந்த இருவரில் ஒருவர் நேற்று முன்தினம் போராட்ட களத்திற்கு சென்ற போது போராட்டம் இடம்பெறும் இடத்தில் இருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்ததாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி கூட்டுத்தாபனத்தை கடந்த 9 ஆம் திகதி போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கைப்பற்றியிருந்தனர்.
தொலைக்காட்சி நிறுவனத்தை கைப்பற்றியதோடு, தொலைக்காட்சியின் நேரலையில் மக்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளனர்.
முடங்கிய தொலைக்காட்சி சேவை

அதனையடுத்து, தொலைக்காட்சி சேவை முற்றாகத் தடைப்பட்டது. அதனையடுத்து போராட்டக்காரர்கள் ITN தொலைக்காட்சி நிறுவனத்தையும் முற்றுகையிடலாம் என்ற அச்சத்தில் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்த நிலையில், ITN தொலைக்காட்சி சேவையும் அன்றைய தினம் முடங்கியது.
அதனையடுத்து அங்கு சிறிலங்கா இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

உலகளாவிய ரீதியில் அரச ஊடகங்கள் அரசாங்கத்திற்கு சாதகமான செய்திகளையே ஒளிபரப்புவது வழக்கமாக இருக்கின்ற போதிலும், அன்றைய தினம் இலங்கையில் தேசிய தொலைக்காட்சி அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சாதகமான ஒளிபரப்பை செய்துள்ளமை வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
அத்துடன் "ரூபவாஹினி தொலைக்காட்சி இனிமேல் பக்கச்சார்பற்ற ஊடக நிறுவனமாக இருக்க வேண்டும்" என அந்த நேரலையில் பேசிய போராட்டக்காரர்களில் ஒருவர் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.