இலங்கையின் சுற்றுலா வருமானத்தில் பாரிய அதிகரிப்பு
2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான சுற்றுலா வருமானம் 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆக பதிவான நிலையில் இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 56% அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் (CBSL) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,804,873 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) சமீபத்திய புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் இலக்கை நெருங்கி வருகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை
நவம்பர் 01ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிக்கு இடையில் நாட்டிற்கு 184,158 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அதிகபட்சமாக 42,376 சுற்றுலா பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து (India) வந்துள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 41,120 ஆக பதிவாகியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ரஷ்யா (Russia) இரண்டாவது இடத்தில் உள்ளது. அதன்படி ரஷ்யாவிலிருந்து (Russia) 29,053 பேர் வருகை தந்துள்ளனர்.
இலங்கை மத்திய வங்கி
இதற்கிடையில், இலங்கை மத்திய வங்கியின் (CBSL) பொருளாதார குறிகாட்டி அறிக்கையின் படி கடந்த ஆண்டு நவம்பர் மாத சுற்றுலா வருமானமான 205.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், இந்த நவம்பரில் 272.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான சுற்றுலா வருமானம் 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும், இது கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையேயான 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 56% அதிகரிப்பைக் குறிக்கிறது.
இந்த ஆண்டு நவம்பரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து வைப்புச் செய்யப்பட்ட வெளிநாட்டுப் பணம் 530.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதுடன் இது ஒக்டோபரில் பதிவு செய்யப்பட்ட 517.4 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
வெளிநாட்டு பணவலுப்பல்கள்
ஓகஸ்ட் 2024 இல் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களின் பணம் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 425 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2023 இல், தொழிலாளர்கள் அனுப்பிய பணம் ஜனவரி முதல் நவம்பர் வரை 5.39 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததுடன் 2024 ஜனவரி முதல் நவம்பர் வரை பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டுப் பணம் 5.96 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான வெளிநாட்டுப் பணம் அனுப்புதல்களின் மொத்த வரவு, ஆண்டுக்கு ஆண்டு 10.4% வளர்ச்சியைப் பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
