இலங்கையிடம் மண்டியிட்டது பங்களாதேஷ்
மூன்றாம் இணைப்பு
2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
258 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
அந்த அணி சார்பில் தவ்ஹித் ஹ்ரிடோய் அதிகபடியாக 82 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் மஹேஷ் தீக்சன, தசுன் சானக, மதீஷ பத்திரன ஆகியோர் தலா 3விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இரண்டாம் இணைப்பு
2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிய நிலையில், பங்களாதேஷ் அணிக்கு 258 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வரும் போட்டியில் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களை பெற்றது.
அதிரடியாக விளையாடிய இலங்கை வீரர்
இலங்கை அணி சார்பில் அதிரடியாக விளையாடிய சதீர சமரவிக்ரம 93 ஓட்டங்களை பெற்றதுடன் குசல் மெண்டிஸ் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பங்களாதேஷ் அணி சார்பில் பந்து வீச்சில் தஸ்கின் அகமட் மற்றும் ஹசன் மஹ்மூட் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
முதலாம் இணைப்பு
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்த போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 4 சுற்றுக்கான டிக்கெட் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
டிக்கெட்டுகள் விலை
இதன்படி கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள சுப்பர் 4 சுற்றுப் போட்டிகளைக் காண 1,000 ரூபாவிற்கு டிக்கெட்டுகள் கிடைக்கப்பெறும்.
கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் Lower Block C மற்றும் D பிரிவில் செப்டம்பர் 9, 12, 14, 15 ஆகிய திகதிகளில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை விளையாட்டு ரசிகர்கள் ரூ.1,000க்கு வாங்க முடியும்.

இதனிடையே இன்றைய போட்டி மழையால் இரத்து செய்யப்பட்டால் நாளை போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய போட்டிக்கு வாங்கப்பட்ட டிக்கெட்டுகள் நாளை செல்லுபடியாகும் என்பதால் கவனமாக வைத்திருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.