மூன்று சீன சந்தேகநபர்களை தேடும் இலங்கை காவல்துறையினர்: பொதுமக்களின் உதவி நாடல்
கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று சீன நாட்டவர்களை கைது செய்வதற்கு இலங்கை காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கொழும்பு துறைமுக நகரப் பகுதிக்கு அருகில் கடந்த ஜூலை 23ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பிலேயே இந்த நபர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.
சம்பவத்தன்று மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு சீன நாட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மூன்று சந்தேகநபர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காவல்துறை விசாரணைகளன்படி, தேடப்பட்டு வரும் மூன்று சந்தேகநபர்களும் இலங்கையிலேயே இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் நாட்டிற்குள் நுழைய பயன்படுத்திய சுற்றுலா விசாக்கள் காலாவதியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால், சந்தேகநபர்கள் விமானம் அல்லது கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் அவர்களை அடையாளம் காணவும் கைது செய்யவும் உதவும் வகையில், மூன்று சந்தேகநபர்களின் புகைப்படங்களையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், கொழும்பு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியை 071 859 1735 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |