ராஜபக்ச அதிருப்தியாளர்களால் தமிழர்களுக்கு ஆபத்து
இலங்கையில் ராஜபக்ச அதிருப்தியாளர்களில் ஒருவர் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் தமிழ் மக்களின் நிலைமை மேலும் கேள்விக்குறியாகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
இதனால் ராஜபக்சக்களை வீட்டுக்குச் செல்லுமாறு போராடும் தரப்பினர் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைக் கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை வலியுறுத்தினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“ இன்று ராஜபக்ச ஆட்சியில் இருந்து அதிருப்தியாளர்கள் பலர் வெளியேறியிருக்கின்றார்கள். இந்த நிலையில், அரசுக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டு வரப்பட இருக்கின்றது.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற்று ஆட்சி மாற்றமொன்று எற்படுமாக இருந்தால் இந்த நாட்டை ஆளப்போவது யார் என்பதை சிந்திக்க வேண்டும்.
நிறைவேற்று அரச தலைவர் முறைமை இல்லாமலாக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரமும் வந்தால் அந்த அதிகரம் முழுவதும் பிரதமருக்கு வரும்.
தற்போதைய நிலையிலே ராஜபகச் சகோதரர்களுடன் இருந்து அதிருப்தியில் வெளியேறிய உறுப்பினர்களில் இருந்து ஒருவர் பிரதமராக வந்தால் நிலை எவ்வாறு இருக்கும்.
இந்த அதிருப்தியாளர்கள் அனைவரும் சேர்ந்து விமல் வீரவன்சவிற்கு பிரதமர் பதவியைக் கொடுப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன.
விமல் வீரவன்ச எப்படிப்பட்டவர் என்பதை கடந்த கால அனுபவங்கள் நமக்குக் கூறும். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் மிக மோசமாக இனத்துவேசம் பேசுபவர்கள். அவர்களிடம் ஆட்சி சென்றால் எண்ணெய்ச் சட்டிக்குள் இருந்து துள்ளி நெருப்புக்குள் விழுந்த நிலைமையாக எமது நிலை வரக்கூடாது.
இந்த நிலைமைகளில் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாங்கள் என்ன செய்ய வேண்டும். தமிழ் மக்களின் நலன் சார்ந்து எப்படியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்” என்றார்.
