இரகசியமாக விற்கப்படும் இலங்கை வளங்கள் - பேரழிவு என்கிறது எதிரணி
நாட்டின் அனைத்து வளங்களையும் தற்போதைய அரசாங்கம் இரகசியமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று (11) அவிசாவளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“முழு நாட்டையும் தவறாக வழிநடத்திய வண்ணம் அரசாங்கம் மேற்கொண்டு வரும் இந்தப் பாரிய விற்பனைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும். நாட்டில் ஏல அரசாங்கமே தற்போது காணப்படுகிறது.
நாட்டு மக்கள் சாப்பிட முடியாமல் பெருமூச்சு விடும்போது கூட, இந்த நிலை குறித்து அரசாங்கம் கவலைப்படவில்லை. அரசாங்கத்தின் செயற்பாடு நாட்டின் அனைத்துத் துறைகளையும் பேரழிவில் ஆழ்த்தியுள்ளது.
அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றியுள்ள போதிலும், நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்து மக்கள் முன்னிலையில் தனது அதிகாரத்தை பரிசோதித்துப் பார்க்க வேண்டும்” என்றார்.