பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் எரித்துக் கொலை!
பாகிஸ்தான் - சியால்கோட்டில் ஒரு கும்பல் இலங்கையைச் சேர்ந்த ஒருவரை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து எரித்து கொன்றுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதே நேரம் குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அப்பகுதிக்கு காவல்துறையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சியால்கோட்டில் உள்ள வசிராபாத் வீதியில் அமைந்துள்ள, தனியார் தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரியும் ஊழியரே, ஏனைய ஊழியர்களினால் இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளாகி எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பிரியந்த குமார என்ற இலங்கையைச் சேர்ந்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக சியால்கோட் மாவட்ட காவல்துறை அதிகாரி உமர் சயீத் மாலிக் உறுதிப்படுத்தியுள்ளார்.
எரியும் சடலத்தை சுற்றி நூற்றுக்கணக்கானோர் கூடியிருப்பதை, சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் காட்சிகள் வெளிக்காட்டுகின்றன.
இந்த கொலை சம்பத்தை கண்டித்துள்ள பஞ்சாப் முதல்வர் உஸ்மான் புஜ்தார், இது ஒரு "மிகவும் சோகமான சம்பவம்" என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறை உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2010 ஆம் ஆண்டு சியால்கோட்டில் அரங்கேறிய இதேபோன்ற ஒரு சம்பவம் பாகிஸ்தானை உலுக்கியது, ஒரு கும்பல் இரண்டு சகோதரர்களை காவல்துறை முன்னிலையில் அடித்துக் கொன்றது.
இந்த கொடூர கொலைக் காட்சிகளின் பகிர்வு, வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதால் இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் திகிலையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
