இந்தியத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு! மாகாண சபை தேர்தல் குறித்து கலந்துரையாடல்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்றையதினம் (20-08-2026) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.
முக்கிய பிரச்சினைகள்
இக்கலந்துரையாடலின் போது தற்போதைய சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக இழுபறி நிலையில் உள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவில் நடத்துவதன் அவசியம் மற்றும் அதன் மூலம் அதிகாரப் பரவலாக்கலை உறுதிப்படுத்துவது தொடர்பாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உள்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் பிராந்திய அபிவிருத்தி சார்ந்த பிற முக்கிய விடயங்கள் குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
மேலும் வட பிராந்தியத்தின் வர்த்தக மற்றும் போக்குவரத்து மையமாகத் திகழும் காங்கேசந்துறை (KKS) துறைமுக திட்டங்களின் தற்போதைய நிலைமை மற்றும் அதனை மேலும் விரிவுபடுத்தி பிராந்திய தொடர்பாடலை வலுப்படுத்துவது தொடர்பாகவும் மேலும் பல விடயங்கள் சார்ந்தும் ஆரோக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |