அரசுக்கு ஆதரவளிக்கும் சிறீதரன்: சபையில் அம்பலப்படுத்திய தயாசிறி
அரசியலமைப்பு பேரவையில் இருந்து கொண்டு அநுர அரசின் தீரமானங்களுக்கு ஆதரவளித்து வரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் அந்தப்பேரவையிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (22) இடம்பெற்ற சபை அமர்வில் கலந்து கொண்டு,உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அனைத்து தீர்மானங்களுக்கும் ஆதரவு
சிறுபான்மை கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறீதரன் அரசியலமைப்பு பேரவையில் அங்கம் வகிக்கின்றார். எனினும் அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களுக்கும் அரசியலமைப்பு பேரவையில் அவர் கைகளை தூக்கி ஆதரவு வழங்குகின்றார்.அவர் தவறான நபர்களை பதவியில் நியமிப்பதற்கும் தமது ஆதரவை வழங்கியுள்ளார்.

தற்போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கான வாக்கெடுப்பின் போது சிறீதரன் ஆதரவு வழங்குகிறார். அவர் அதற்கான நியாயப்பாடுகளையும் அறிவிக்கவில்லை.
சாரங்கனுக்கு எதிராக முறைப்பாடு
சூரிய மின் சக்தி வேலைத்திட்டத்திற்கான காணி ஒதுக்கீடு விடயத்துடன் தொடர்புபடுத்தி இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி குறித்து தற்போது சிறீதரன் சாரங்கனுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இலங்கை தமிழரசுக் கட்சி கூட அவரை அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் அந்த பேரவைக்கு நியமிக்கப்பட்ட அவர், அரசாங்கத்தின் தீர்மானங்கள் அனைத்துக்கும் ஆதரவளிக்கிறார். அது மாத்திரமல்ல அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
வடக்கு மக்களுக்கு எதிராக செயற்பாடு
கணக்காய்வாளர் நியமனம், இழப்பீட்டு அலுவலகங்களுக்கான நியமனத்தில் இராணுவ பின்புலம் கொண்ட இருவரது நியமனத்திற்கு ஆதரவளித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

வடக்கு மக்களின் வாக்கில் நாடாளுமன்றம் வந்த அவர், அவர்களுக்கு எதிராக செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. எனவே அரசியலமைப்பு பேரவையில் இருந்து சிறீதரன் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |