தமிழ் புலம்பெயர்ந்தோருக்காக அரசாங்க பிடியில் சுரேஷ் சலே! வேதனையில் மொட்டுக்கட்சி
முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேவுக்கு இவ்வாறு நடந்திருக்குமாயின், அதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட தற்போதைய அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என மொட்டுக்கட்சி கவலை வெளியிட்டுள்ளது.
மேலும் தமிழ் புலம்பெயர்ந்தோரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவே அரசாங்கம் இதை செய்வதாக அந்த தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள - நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று(05.06.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமன்பிரிய ஹேரத் மற்றும் சம்பத் அத்துகோரள ஆகியோர் இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
தடுப்புக்காவலில் வைத்துச் சித்திரவதை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, நாட்டுக்குச் சேவையாற்றிய முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சாலேவை அதே சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைத்துச் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சாலே நேற்று(04) நீதிமன்றத்தில் பிணை கோரியிருந்த போது, அவர் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இரு ஜனாதிபதி சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
இதன்படி கடந்த கால மக்கள் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கெடுத்தவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது கூட அவர்களுக்கு எந்தவொரு உடல்ரீதியான சித்திரவதைகளும் செய்யப்படவில்லை.
ஆனால், சுரேஷ் சலேவுக்கு இவ்வாறு நடந்திருக்குமாயின், அதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட தற்போதைய அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், தமிழ் டயஸ்போராவை (புலம்பெயர் தமிழர்) மகிழ்ச்சிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இவ்வாறான அரசியல் பழிவாங்கல்களை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.