மாணவர்களின் புத்தகபையில் கிடந்த பொருட்களால் அதிர்ச்சி
பாடசாலை மாணவர்களின் புத்தகபைகளில் சந்தேகத்திற்கிடமான சில பொருட்களுடன் சில இன்ஹேலர்கள் காணப்பட்டதாக கொகரெல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் புத்தக பைகளில் இவை கிடைத்ததை அடுத்து, அவற்றை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவரை கொகரெல்ல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆசிரியர் பரிசோதனை
இவர் கொகரெல்ல பகுதியில் கையடக்க தொலைபேசி மற்றும் பாகங்கள் விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறார்.

கொகரெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அதே தரத்தில் கல்வி கற்கும் சில மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதித்த வகுப்பு ஆசிரியர் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வசந்த கித்சிறி ஜயலத் மேற்பார்வையின் கீழ், குருநாகல் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் உபுல் சந்தன அபேசிங்கவின் பணிப்புரையின் பேரில்,காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் விஜேரத்ன, பிரதான காவல்துறை குழுவொன்று சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
