தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தம் சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல : முன்னாள் தவிசாளர் சுட்டிக்காட்டு
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தியமையானது எந்தவொரு சிங்களப் பிரஜைக்கும் எதிரானது அல்ல என ரெலோவின் (TELO) தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் (Thiagaraja Nirosh) தெரிவித்துள்ளார்.
நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பதற்காக நாட்டின் தேசிய இனமான தமிழ் இனம் இன உரிமைகளை விற்று வாழ முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து நேற்று (10) வடமராட்சி மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசியல் அபிலாசைகள்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தமிழ்த் தேசியம் இன்று பலவாறாக அகத் துண்டாலுக்கு உட்பட்டு வருகின்றது. இது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளியுலகிற்கும் ஆட்சியில் அமர்பவர்களுடன் பேசுவதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கான நிலைமைகளை பலமிழக்கச் செய்து விடுமோ என்ற நியாயபூர்வமான அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அவ் அச்சத்தில் நியாயபூர்வமான யதார்த்தம் உள்ளது. தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய இனமான நாம் எமது அரசியல் அபிலாசைகளை சாதாரண ஜனநாயக உரிமைகளுடன் மட்டும் மட்டுப்படுத்திவிடமுடியாது.
நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தளவு தூரம் ஆட்சியில் அமரக்கூடிய ஒருவருக்கு ஆதரவு அளிக்கலாம் என்று சிலர் அல்லும் பகலும் அறைபோட்டு சிந்திக்கின்றனர் செயற்படுகின்றனர்.
அவர்கள் இந்த நாட்டில் வெல்லக்கூடிய ஒருவரை தேடிப்பிடித்து சலுகைகளைப் பெற்று சகித்து வாழுவோம் என்ற என்ற மனநிலையில் இனத்தினை அடமானம் வைக்கின்றனர்.
நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையான எண்ணிக்கையில் வாழ்கின்றனர் என்பதற்காக எண்ணிக்கையில் குறைந்த அளவுடைய நாட்டின் தேசிய இனமான தமிழ் இனம் இன உரிமைகளை விற்று வாழ முடியாது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள்
சிங்கள பேரினவாதிகளுக்கு நோகக்கூடாது என்று வாழ்பவர்கள் எம்மிடத்தில் அதிகரித்துவிட்டனர். மக்களின் இட்சியத்தினையும் தியாகத்தினையும் விற்றுப்பிழைப்பதில் முன்டியடிக்கின்றனர்.
மண்ணுக்காக எத்தனையோ தியாகங்களை எம் இனம் மேற்கொண்டிருக்கின்றது. அடிப்படையில், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதை வலியுறுத்தியும் எமக்கு சமஸ்டி அடிப்படையிலான உலகம் ஏற்றுக் கொண்ட அரசியல் தீர்வினை முன்வைக்கக் கோரியும் நாம் பொது வேட்பாளரை முன்நிறுத்திச் செயற்படுவது நியாயபூர்வமாகச் சிந்திக்கும் எந்தவொரு சிங்களப் பிரஜைக்கும் எதிரான வேலைத்திட்டம் கிடையாது.
சிங்கள முற்போக்கு சக்திகளும் சொந்த தாய் நாட்டில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் தமிழ் மக்களின் கருத்து வெளிபாட்டு உரிமைக்கும் ஜனநாயக உரிமைக்கும் மதிப்பளித்து வாக்களிக்க முடியும்.
தமிழ் மக்களைப் பொறுத்தளவில் எமது அரசியல் அபிலாசைகளை தொடர்ந்தும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இன்றுள்ள நிலையில் ஒருமித்து தமிழ் பொது வேட்பாளரின் சின்னமான சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கடமையினை நிறைவேற்றுவோம்“ என தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025
