பிரிந்தால் சாதிக்க முடியாது - தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அட்வைஸ்
தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் இணைந்து மக்களுக்கு அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எல். அன்ஸார் தெரிவித்தார்.
அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று(15) நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் பேசிய அவர்,
கல்முனை பிரதேச செயலக பிரச்சினை, சாய்ந்தமருது நகர சபை பிரச்சினை என்பன நீண்ட காலமாக தொடர்ந்து வருகின்றது.
சாய்ந்தமருது நகர சபையை பெறுவதற்காக பலரும் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். இதற்கு ஒருவர் மாத்திரம் உரித்தானவர்கள் அல்ல - பலரும் செயற்படுகின்றனர்.
சாய்ந்தமருதுவிற்கு சபை கிடைக்க வேண்டும் என்பதில் பலரும் உறுதியாக இருக்கின்றார்கள்.
பிரிந்து நின்று எதனையும் சாதிக்க முடியாது. தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் இணைந்து மக்களுக்கு அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இதனை ஒரு மேசையில் இருந்து பேசி தமிழ் பேசும் மக்களுக்கான பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றார்.