ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கு அரசாங்கம் முன்னுரிமையளிக்கும் என பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சர்கள் கலந்தாய்வுக் குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது குறித்த மாகாணங்களில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விசேட முக்கியத்துவம் அளிக்கும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஆசிரியர் பற்றாக்குறை
மேலும், அப்பகுதிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கு ஒரு நீண்டகால உத்தி அவசியமாகின்றது எனவும் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த மூன்று மாகாணங்களிலும் நடைபெற்று வரும் பாடசாலைக் கட்டிட மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தினார்.
இதன்போது, மனிதவள முகாமைத்துவம் மற்றும் உயர் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் குழுக்கள் உட்பட, தனது மேற்பார்வையின் கீழ் நிறுவப்பட்ட உட்குழுக்களின் முன்னேற்றத்தையும் பிரதமர் ஆய்வு செய்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |