ஆசிரியர்களுக்கு பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்
நாட்டிலுள்ள தேசிய கல்வியிற் கல்லூரிகளுடன் (National College of educations) ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளையும் (Teachers' Training Colleges) இணைத்து பயிற்சிகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22) வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி (Rajeewan Jayachandramurthy) எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடளாவிய ரீதியில் 8 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராகம ஆசிரியர் பயிற்சி கல்லூரி பேராதனை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு 150 பேருக்கு அங்கு பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு
தொடர்ச்சியான ஆசிரியர் பயிற்சி மூலம் அவர்களது திறமையை அபிவிருத்தி செய்வதற்கு இந்த வருடத்தில் விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வியிற் கல்லூரிகளுடன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளையும் இணைத்து பயிற்சிகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில் 2,175 பயிற்சியாளர்களை இணைத்து பயிற்சிகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
சம்பந்தப்பட்ட பயிற்சி நிறுவனங்களின் விடுதி வசதிகளை அதிகரித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் வகையில் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
