இரத்தக்களரியாக மாறிய நீர்கொழும்பு சிறை! பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!
புதிய இணைப்பு
இன்று காலை நீர்கொழும்பு சிறையில் மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தொன்பதாக உயர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரிகளும், சிறைக் கைதிகளும் உள்ளடங்குகின்றனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலரது உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வன்முறையின் தீவிரத்தன்மை காரணமாக 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐந்தாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்த மோதல் சம்பவங்களில் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்தவர்களை கொழும்பு பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நான்காம் இணைப்பு
நீர்கொழும்பு சிறையில் மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் காயங்களால் மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர்களில் மூன்று பேர் சிறை அதிகாரிகள் என்றும், மற்றைய இருவர் சிறைக் கைதிகள் என்றும் கூறப்படுகிறது.
அத்துடன் 35க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்தவர்களை கொழும்பு பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மூன்றாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஏற்பட்ட மோதல்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இருவர் சிறைச்சாலை அதிகாரிகள் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இந்த வன்முறைச் சம்பவங்களில் நேற்றும், இன்றும் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பலத்த மோதல்! கதவை உடைத்து சிறைக்குள் நுளைந்த அதிரடிப்படை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலவும் பதற்றநிலை காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலைக்குள் கைதிகளின் வன்முறை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, காவல்துறை விசேட அதிரடிப்படையினர் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இன்று (06) மீண்டும் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
நேற்று இடம்பெற்ற மோதலில் கைதிகள் இருவர் உயிரிழந்ததுடன், 38 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று ஏற்பட்டுள்ள புதிய மோதல் சம்பவத்தில் மேலும் 20 பேர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மதியம் 1 மணியளவில் விளக்கமறியல் கைதிகள் குழுவிற்கும், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த வன்முறைக்குக் காரணமாக அமைந்தது.
விசேட அதிரடிப்படையினர் வரவழைப்பு
காவல்துறையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் முயற்சியால் இன்று காலை நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த போதிலும், சில மணிநேரங்களிலேயே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |