அநுர அரசாங்கத்திற்கு நீண்ட ஆயுள் இல்லை : எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்துக்கு நீண்ட ஆயுள் இல்லை என்பது மாத்திரம் தெளிவாகிறது என சிறிலங்கா சுதந்திர கட்சியின் (SLFP) முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான அநுர பிரயதர்ஷன யாபா (Anura Priyadharshana Yapa) தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் இன்று (1) கொழும்பு - டாலி வீதியில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதிருப்பது எந்த வகையான அரசாங்கம் என்று யாராலும் கூற முடியாது. அதேபோன்று இந்த அரசாங்கம் எந்த வகையில் ஆட்சியை முன்னெடுத்துச் செல்கிறது என்பதும் யாருக்கும் தெரியாது.
மின் கட்டணம் அதிகரிக்கப்படும்
தொழிலாளர்களை இந்த அரசாங்கம் எவ்வாறு பார்க்கிறது? ஆனால் அரசாங்கத்துக்கு நீண்ட ஆயுள் இல்லை என்பது மாத்திரம் தெளிவாகிறது. தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளை இவர்களால் முகாமைத்துவம் செய்ய முடியாவிட்டால் ஆட்சியை முன்கொண்டு செல்லவும் முடியாது.
தேர்தல் நிறைவடைந்த பின்னர் மின் கட்டணம் அதிகரிக்கப்படும். அதற்கான அறிவுறுத்தல் அராசங்கத்துக்கு கிடைத்துள்ளது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தாத அரசாங்கம் உழைக்கும் வர்க்கத்தினருக்காக எதையும் செய்ய முடியாது.
நிவாரணங்களை வழங்குவதற்கு பதிலாக அவை நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு எதிராக மக்கள் ஜனநாயக ரீதியில் குரல் கொடுக்க வேண்டும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த பதிலடியைக் கொடுக்க வேண்டும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
