மகிந்தவின் மனுவை நிராகரித்தது நீதிமன்றம் - மைத்திரிக்கு கிடைத்த வெற்றி
முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக நியமித்தமை சட்டவிரோதமானது எனவும் அவரது நியமனத்தை இடைநிறுத்துமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர கொழும்பு மாவட்ட நீதிமன்றில் கோரியிருந்த தடை உத்தரவு கொழும்பு மாவட்ட நீதிபதி திருமதி பூர்ணிமா பரணகமவினால் இன்று (08) நிராகரிக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கு இலக்கம் 497/2022 இன் கீழ் மஹிந்த அமரவீரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
மற்றுமொரு மனுவும் நிராகரிப்பு

மனுதாரர் மஹிந்த அமரவீரவுக்காக சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ஜகத் விக்கிரமநாயக்கவும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
ஏற்கனவே தம்மை கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து நீக்கும் கட்சியின் முடிவிற்கு எதிராக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தொடுத்த வழக்கையும் நீதிமன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.