தமிழகத்தில் கோவில்களில் தொலைபேசிகளுக்கு தடை...!
தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்கு தொலைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்று (01-09-2026) முதல் குறித்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில் கோயில்களின் புனிதத்தன்மை மற்றும் ஆன்மீக சூழலைப் பாதுகாக்கவும், ரீல்ஸ் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதால் பிற பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தைத் தவிர்க்கவும் இந்ந நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோயில்களின் நுழைவு
இதற்காக கோயில்களின் நுழைவு வாயில்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டகங்களில் ரூபாய் ஐந்து கட்டணம் செலுத்தி தொலைபேசிகளை பாதுகாப்பாக ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வருகை தரும் போது முன்னறிவிப்பு இன்றி காணொளி புகைப்படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்டுள்ள சில முக்கிய கோயில்களில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், பெரியபாளையம் பவானி அம்மன், குன்றத்தூர் முருகன், வல்லக்கோட்டை முருகன் ஆகிய கோயில்களும், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர், திருத்தணி முருகன், திருவள்ளூர் வீரராகவர் போன்ற கோயில்களும், மேலும் தென் மத்திய மாவட்டங்களில் திருச்செந்தூர் முருகன், பழனி முருகன், திருப்பரங்குன்றம் முருகன், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மதுரை அழகர் , ராமேசுவரம் ராமநாதசாமி, நெல்லையப்பர், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி, கோவை கோணியம்மன், சேலம் கோட்டை மாரியம்மன் உள்ளிட்ட 52 கோயில்கள் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |