இந்தியாவை உலுக்கிய 10 மோசமான விமான விபத்துகள்!
இந்தியாவின் - குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று (12) ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார்.
தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
10 மோசமான விமான விபத்துகள்
இந்தநிலையில் இந்தியாவில் இதற்கு முன்பும் பல விமான விபத்துக்கள் நடந்த நிலையில் 10 மோசமான விமான விபத்துகளாக பின்வருவன குறிப்பிடப்படுகின்றன.
1978ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி மும்பையிலிருந்து 213 பேருடன் புறப்பட்ட போயிங் 747 விமானம் அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் இதில் 213 பேர் உயிரிழந்தனர்.
1982ஆம் ஆண்டு ஜூன் 21ம் திகதி மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியதில் 17 பேர் உயிரிழந்தனர்.
1988ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி அகமதாபாத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 133 பேர் உயிரிழந்தனர்.
1990ஆம் ஆண்டு பெப்ரவரி 14இல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூர் அருகே விபத்துக்குள்ளானதில் 92 பேர் உயிரிழந்தனர்.
1991ஆம் ஆண்டு ஓகஸ்ட்16இல் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 69 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
1993ஆம்ஆண்டு ஏப்ரல் 26இல் மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் விபத்துக்குள்ளான நிலையில் டிரக் மற்றும் மின்சார கம்பங்கள் மீது மோதியதில் 55 பேர் உயிரிழந்தனர்.
349 பேர் உயிரிழப்பு
1996ஆம் ஆண்டு நவம்பர் 12இல் சவுதி அரேபியாவின் போயிங் விமானமும், கஜகஸ்தானின் விமானமும் டில்லி அருகே மோதிக் கொண்டன. விமானிகளின் தவறு காரணமாகவும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பின் தவறான தகவல் தொடர்பாலும் நடந்த விபத்தில் 349 பேர் உயிரிழந்தனர்.
2000ஆம் ஆண்டு ஜூலை 17இல் அலையன்ஸ்ஏர் நிறுவனத்தின் போயிங் விமானம் தரையிறங்கம்போது விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்தனர். விமானியின் தவறால், கட்டுப்பாட்டை இழந்தது தெரியவந்தது.
2010ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகி பள்ளத்தில் விழுந்து உடைந்தது. இதில் 158 பேர் உயிரிழந்தனர்.
2020இல் கேரள மாநிலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்கு உள்ளாகி ஓடுபாதையை விட்டு விலகி இரண்டு துண்டானதில் 21 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இந்திய வரலாற்றில் 1996இல் நடந்த விமான விபத்தில் 349 பேர் உயிரிழந்ததே மிகப்பெரிய அனர்த்தமாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
