யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாய்க்கும் மகனுக்கும் அவுஸ்ரேலியாவில் நேர்ந்த துயரம்
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் அவரது மகனும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற் போயுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
67 வயதான ஹேமலதா சச்சிதானந்தம் மற்றும் அவருடன் இருந்ததாக நம்பப்படும் அவரது 34 வயது மகன் பிரமுத் ஆகியோரே காணாமற் போனவர்களாவர்.
இவர்கள் சென்ற கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனினும் காரினுள் காவல்துறையினர் சோதனையிட்டு அதனுள்ளிருந்த தனிப்பட்ட உடைமைகளை கண்டுபிடித்தபோதிலும்,இருவரையும் காணவில்லை.
இதேவேளை மேற்கு சிட்னியின் புறநகர் பகுதியான வென்ட்வொர்த்வில்லில் வெள்ளத்தில் ஆண் மற்றும் ஒரு பெண்ணின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் அவை காணாமல்போன தாய் மற்றும் மகனுடையதாக இருக்கும் என நம்பப்படுகிறபோதும் காவல்துறையினர் இன்னமும் உறுதிசெய்யவில்லை.
ஹேமலதா சச்சிதானந்தம் வானொலி அறிவிப்பாளராக தமிழ் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர் ஆவார்.
மகன் பிரமுத் விசேட தேவையுடையவர் எனவும் மற்றவர்களுடன் பேச்சுத்தொடர்பு கொள்ள முடியாதவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.