குறிஞ்சாக்கேணியில் மீண்டும் போராட்டம்- சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள்!
குறிஞ்சாக்கேணி- கிண்ணியா இடையே இன்று முதல் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் நேற்று கடல் வழிப்பாதைப் பயணத்தில் ஆறு உயிர்களைக் காவு கொண்டதன் எதிரொலியாக இன்று காலை 7.00 மணிக்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தை மறித்து எதிர்ப்புப் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
இதனால் குறிஞ்சாக்கேணி பிராதான வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டது. பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்காக தற்காலிகமாக இப்பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்பேருந்து சேவை, காக்காமுனை, குறிஞ்சாக்கேணி,கச்சக்கொடித்தீவு ஊடாக கிண்ணியாவை சென்றடைவதற்காக சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்காக விடப்பட்டது. எனினும் இச்சேவையை ஆறு உயிர்கள் போனதன் பிறகா ஆரம்பிக்க வேண்டும், இதற்கு முன்னரே சேவையில் ஈடுபடுத்தியிருக்கலாமே எனக் கோரியே மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
பேருந்து செல்ல முடியாமல் பேருந்துக்கு முன்னால் கற்களை போட்டுத் தடைப்படுத்தியிருந்தனர். காக்காமுனையிலிருந்து பாடசாலை செல்வதற்காக சுமார் 15 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குறிஞ்சாக்கேணியில் இறக்கப்பட்டனர்.
பின்ர் அங்கிருந்து அவர்கள் வீடு சென்றனர், சிலர் வேறு மார்க்கத்தினூடாக பாடசாலை சென்றனர். இதனையடுத்து, அவ்விடத்துக்கு கிண்ணியா காவல் நிலையப் பொறுப்பதிகாரி, மற்றும் கிண்ணியா இராணுவ முகாம் பொறுப்பதிகாரிகள் சென்றிருந்தனர்.
போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி, எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து எதிர்ப்புக் கைவிடப்பட்டது.