போர் நிறுத்த முன்மொழிவுகளை நிராகரித்த ஈரான்: அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க ஈரான் முன்வரத் தவறினால் அந்த நாடு இதுவரை சந்தித்திராத அளவிலான மிகக்கடுமையான இராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் கரோலின் லெவிட் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எப்போதும் அமைதி வழியையே விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கள யதார்த்தம்
இனிமேலும் உயிரிழப்புகளோ அல்லது அழிவுகளோ ஏற்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதே ஜனாதிபதி விருப்பம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தற்போதைய கள யதார்த்தத்தை ஈரான் புரிந்துகொள்ளத் தவறினால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, ஈரான் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பதையும் அது தொடரும் என்பதையும் அவர்கள் உணரத் தவறினால் ஈரான் இதுவரையில் சந்தித்திராத வகையிலான மிகக்கடுமையான தாக்குதல்களை ட்ரம்ப் உறுதி செய்வார் என லெவிட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா முன்வைத்துள்ள 15 அம்ச அமைதித் திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ள சூழலில் வெள்ளை மாளிகையிடமிருந்து வந்துள்ள இந்த நேரடி எச்சரிக்கை உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |