யாழில் பள்ளி மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருள் விற்பனை: இருவர் கைது
யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துப் போதைப்பொருட்களை விற்பனை செய்துவந்த இருவர், பொதுமக்களின் தகவலுக்கமையக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் 45 மற்றும் 49 வயதுடைய அல்லைப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அல்லைப்பிட்டி பகுதியின் இரு வேறு இடங்களில் வைத்து இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதைப்பொருள் விற்பனை
இது குறித்து ஊர்காவற்றுறை காவல்துறையினர் தரப்பில் மேலும் தெரியவருகையில், வேலணை பிரதேசத்தில் குறித்த இருவரும் மாடு திருட்டு, களவு மற்றும் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சமூகவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பாகப் பாடசாலை மாணவர்களுக்குப் போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாகத் தகவல் கிடைக்கப்பெற்று வந்தது.
இந்நிலையில் ஊர்காவற்றுறை காவல் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் ஊர்காவற்றுறை குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி வினோத் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது அல்லைப்பிட்டி சந்திப் பகுதியில் வைத்து ஒருவரும் அல்லைப்பிட்டி தேவாலயப் பகுதியில் வைத்து ஒருவருமாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தீவகப் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வாறு செயற்படும் நபர்களது தகவல்களை அச்சமின்றி வழங்குமாறும் பொதுமக்களிடம் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |