ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: ஐ.நா சபை கடும் கண்டனம்
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பாதுகாப்புக் கூட்டத்தில் கருத்துப் பகிரப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடேரஸ் கருத்து தெரிவிக்கையில், “ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலும், ஈரானின் பதிலடித் தாக்குதலும் கண்டிக்கத்தக்கவை.
அணுசக்தித் திட்டம்
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் சர்வதேச மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்குச் சாத்தியக்கூறுகளும் இல்லை.
இந்தத் தாக்குதலால் வியன்னாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வீணடிக்கப்பட்டுவிட்டது.

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து உடனடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்துகிறேன்.
சர்வதேசச் சட்டத்தைக் கடைப்பிடிக்குமாறும், பொதுமக்களைப் பாதுகாக்குமாறும் மற்றும் அணுசக்திப் பாதுகாப்பு தீவிரமாவதைத் தடுக்கவும் வலியுறுத்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
பலி எண்ணிக்கை
இதனிடையே ஐ.நா அவைக்கான ஈரான் தூதர் அமீர் சயீத் ஐராவனியும் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு போர்க்குற்றத்தைச் செய்துள்ளன.
அப்பாவி பொதுமக்களின் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது ஓர் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மட்டுமல்ல, இது ஒரு போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, ஐ.நா அவைக்கான இஸ்ரேல் தூதர் டேனி டேனன் கருத்து தெரிவிக்கையில், “ஈரானின் அச்சுறுத்தலைத் தடுக்கவே இஸ்ரேலும் அமெரிக்காவும் நடவடிக்கை எடுத்தன.
நாங்கள் எந்த உள்நோக்கமும் ஆக்கிரமிப்புக் காரணங்களாலும் செயல்படவில்லை.
அச்சுறுத்தல் இருக்கும் வரையில் கூட்டு முயற்சி தொடரும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் தலைமை
மேலும் கருத்துத் தெரிவித்த அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ், “ஈரானுடனான இந்த மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வுகாண அனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா மேற்கொண்டது.
இருப்பினும், அனைத்து வாய்ப்புகளையும் ஈரான் பயன்படுத்தத் தவறிவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்தத் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இந்தப் போருக்கான இரு தரப்பு நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய நாடுகள் அவை தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |