யுத்த மௌனிப்பின் பின்னரான தாயக ஆக்கிரமிப்பு - சுய ஆட்சி இல்லா தேசம்!
சிறிலங்காவிற்கு ஐ.நாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்குமாறும், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைக்குமாறும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில், ஆயுத போராட்டம் முடிவிற்கு வந்த பின்னரே தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள பெளத்தமயமக்கல் பெரும் வேகமெடுத்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா மனித உரிமை பேரவையில் நேற்று வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“தமிழர் தாயகமெங்கிலும், சிங்களவர்கள் இயல்பாக குடியிருக்காத பகுதிகளில் கூட, சிறிலங்கா அரச இயந்திரத்தின் துணையுடன் பெளத்த மத ஆலயங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அழிக்கப்படும் தமிழர் தொன்மை
நீதிமன்ற கட்டளையினை மீறி, தமிழரின் தொன்மையான வழிபாட்டிடமான குருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாடு அழிக்கப்பட்டு அங்கு ஒரு பெளத்த விகாரை கட்டப்பட்டிருக்கிறது.
அத்தோடு சில இடங்களில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பெளத்த ஆலயங்களை சூழ இருக்கும் பகுதிகளில், தமிழர் தாயகத்தின் இனப்பரம்பலை திட்டமிட்டு மாற்றியமைக்கும் முனைப்போடு, சிறிலங்கா அரச ஆதரவுடன் சிங்கள குடியேற்ற திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆகவே, தமிழர் தேசமான ஈழத்தை சுய ஆட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக ஐ.நா சபையில் அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன். அத்துடன், சிறிலங்காவிற்கு ஐ.நா.வின் சிறப்பு தூதுவர் ஒருவரை நியமித்து, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைக்க வேண்டும்.
ஈழத்திற்கான அங்கீகாரம்
இன்னமும் சுய ஆட்சி பெறப்படாத நிலப் பகுதிகளாக இன்றைய நிலவரப்படி 17 பகுதிகளை ஐ.நா அமைப்பு அடையாளப்படுத்தி பிரகடனம் செய்துள்ள நிலையில், ஈழத்தையும் சுய ஆட்சி பெறாத பகுதியாக அங்கீகரிக்க வேண்டும்.
உண்மையில் தமிழர்களின் பாரம்பரிய புராதன அடையாள நிலமானது, சிங்கள பெளத்தமயமாக்கலுக்கான பகுதியாக சிறிலங்கா அரசினால் குறிவைக்கப்பட்டு, அங்கு இனப்பரம்பல் மாற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நாயாறு, தையிட்டி , நாவற்குழி, மாங்குளம் சந்தி, கச்சல் சமளங்குளம், கன்னியா வெந்நீரூற்று என்பன, இவ்வாறு தமிழர் தாயக நிலத்தில் பெளத்த ஆலயங்கள் அமைக்கப்பட்டுவரும் சில இடங்களாகும்.
இவற்றுள் பெரும்பாலனவை சிறிலங்கா அரச ஆதரவோடு , தமது அரசின் நீதிமன்ற கட்டளைகளை தாமே மதிக்காது, உதாசீனப்படுத்தி, கட்டமைக்கப்பட்டு வரும் ஆலயங்கள்.
மேய்ச்சல் தரைகள் அபகரிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரை, தமிழர்கள் காலங்காலமாக 300,000 க்கும் மேற்பட்ட கால்நடைகளின் மேய்ச்சலுக்குப் பயன்படுத்திவரும் நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி, அங்கு சட்டவிரோதமான முறையில் சிறிலங்கா அரச ஆதரவோடு சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் சிங்களவர்களால், தமிழர்கள் மேய்ச்சல் நிலங்களில் இருந்து துரத்தப்படுகின்றனர்.
அதுமட்டுமன்றி, “மாதுரு ஓயா வலதுகரை அபிவிருத்தி திட்டம்” எனும் பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமானது, அந்தப் பகுதியில் இருக்கும் தமிழர்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு, சிங்களவர்களை குடியேற்றி இனப்பரம்பலை மாற்றவே சிறிலங்கா அரசினால் பயன்படுத்தப்படுகிறது.
இதேவேளை, புராதன தமிழ் சைவ வழிப்பாட்டிடமான வெடுக்குநாறி மலையினை பெளத்த புராதன பிரதேசமாக மாற்றியமைத்து பிரகடனப்படுத்தும் நோக்குடன், அப்பகுதியை சிறிலங்கா அரசின் தொல்பொருட்திணைக்களம் கையகப்படுத்தியிருக்கிறது.
யுத்தத்தின் பின்னரான ஆக்கிரமிப்பு
ஆயுத போராட்டம் முடிவுற்று 13 ஆண்டுகள் கடந்த நிலையிலும், நடைமுறையில் தமிழர்கள் மீது, சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட கலாசார இனவழிப்பும் முனைப்புடன் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
ஆகவே தான், தமிழர் தேசமான ஈழத்தினை, சுய ஆட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறு இந்த அவையின் அங்கத்துவ நாடுகளிடம் கோருகிறோம்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.