அமெரிக்காவின் அதிரடி அனுமதி: தடையின்றி ரஷ்ய எண்ணெய் பெரும் இந்தியா
இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கி அமெரிக்கா சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர்ச் சூழலால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க திறைசேரி திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து...! நீரில் மூழ்கிய பலர் - மீட்பு நடவடிக்கை தீவிரம்
அமெரிக்க திறைசேரி
குறித்த அறிவிப்பின்படி, 2026 மார்ச் ஐந்தாம் திகதிக்கு முன்னர் கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய மசகு எண்ணெய் மற்றும் இதர பெற்றோலியப் பொருட்களை எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி வரை இந்தியா இறக்குமதி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட், “இந்தியா எங்களது மிக முக்கியமான பங்காளியாகும்.

உலகச் சந்தையில் எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் இந்தத் தற்காலிகச் சலுகை வழங்கப்பட்டுள்ளது" என விளக்கமளித்துள்ளார்.
பொதுவாக உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய ஈரான் - இஸ்ரேல் போர்ச் சூழலை முன்னிட்டு இந்த விசேட விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த இராஜதந்திர முடிவினால் போர் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தியாவின் உள்நாட்டு எரிசக்தித் தேவை தடையின்றிப் பூர்த்தியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |