நடுக்கடலில் ஈரானியக் கப்பலைச் சுட்டுப் பிடித்த அமெரிக்கா: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீறி ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முயன்ற டூஸ்கா (TOUSKA) என்ற ஈரானியக் கொடி ஏந்திய கப்பலை அமெரிக்கக் கடற்படையினர் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர்.
இந்தத் தகவலை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனடிப்படையில், ஓமன் வளைகுடாவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலான யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் (USS SPRUANCE), இந்த ஈரானியக் கப்பலை மறித்து நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிய மாலுமிகள்
இருப்பினும், ஈரானிய மாலுமிகள் அந்த உத்தரவிற்குக் கீழ்ப்படிய மறுத்ததால் அமெரிக்கக் கடற்படை கப்பலின் எஞ்சின் அறையைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி அதை நிலைகுலையச் செய்துள்ளது.
இதையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான கப்பல் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கக் கடற்படையின் மெரின் (Marines) வீரர்கள் அந்த ஈரானியக் கப்பலுக்குள் புகுந்து அதை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த டூஸ்கா கப்பல் ஏற்கனவே சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமெரிக்கக் கருவூலத் துறையின் (US Treasury) தடைப் பட்டியலில் (Sanctions list) இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், தற்போது முழு கப்பலும் எங்கள் வசம் உள்ளது எனவும் அதில் என்னென்ன பொருட்கள் கடத்தப்பட்டன என்பது குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம் எனவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ள நிலையில் ஈரானியக் கப்பலையே அமெரிக்கா நடுக்கடலில் வைத்துச் சுட்டுப் பிடித்துள்ள இச்சம்பவம் பிராந்தியத்தில் உச்சக்கட்ட பதற்றத்தை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |