ஈரான் மீதான அமெரிக்காவின் கொடூர தாக்குதல்
தெற்கு ஈரானின் சீரிக் பகுதியில் அமைந்துள்ள பண்டார் கூஹெஸ்டாக் என்ற இடத்தில் திருமண நிகழ்வொன்று நடைபெற்ற மண்டபத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில், 4 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்னர்.
இந்தத் தாக்குதலை ஈரானிய வெளிவிவகார அமைச்சு கடுமையாகக் கண்டித்துள்ளதுடன் இதனை “அமெரிக்க இராணுவத்தின் கொடூரமான குற்றம்” என ஈரான் தரப்பு சாடியுள்ளது.
அமெரிக்க இராணுவத்தின் கொடூரமான குற்றம்
ஈரான் மீது அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஈரானின் வான் பாதுகாப்புத் தளங்கள், ரேடார் அமைப்புகள், கடற்படை உள்கட்டமைப்புகள், கண்ணிவெடி வைக்கும் வசதிகள் மற்றும் தொலைத்தொடர்பு மையங்கள் உள்ளிட்ட இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக, ஈரானிய புரட்சிகரக் காவல் படைகள் ஜோர்தான், ஈராக் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்தானிய வான்வெளியில் நுழைந்த 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளை தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
பஹ்ரைனில் ஈரானிய ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு ஈராக்கின் அர்பில் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக ஈரானிய புரட்சிகரக் காவல் படைகள் அறிவித்துள்ளன.
கடந்த ஜூலை மாதத்துக்குப் பின்னர் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்றுள்ள மிக மோசமான நேரடி இராணுவ மோதலாக இது கருதப்படுகிறது. இதனால் மேற்காசியாவில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |