ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும் காலம்! அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை
ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும் காலத்தை எட்டு ஆண்டுகளில் இருந்து கணிசமாக அதிகரிக்க போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது .
இதற்காக ஒரு முறையான திட்டத்தை முன்மொழிய தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய ஓட்டுநர் உரிமங்களைப் பெறும்போது விண்ணப்பதாரர்களின் வயது மற்றும் உடல் தகுதியைக் கருத்தில் கொண்டு, ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலத்தை எட்டு ஆண்டுகளுக்கு மேல் அதிகரிக்க ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய ஓட்டுநர் உரிமம்
புதிய ஓட்டுநர் உரிம விண்ணப்பதாரர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பிக்க வரும் விண்ணப்பதாரர்களுக்கு செல்லுபடியாகும் காலத்தை பொருத்தமான காலத்திற்கு அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இது ஒரு முடிவு அல்ல, ஒரு திட்டம் மட்டுமே என்று கூறியுள்ளார்.
அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், கனரக வாகன ஓட்டுநர்களுக்கு இது பொருந்தாது என்றும், கனரக வாகன ஓட்டுநர்கள் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் தங்கள் ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஓட்டுநர் உரிமங்களைப் பெறுவதற்கு அவசியமான தேசிய போக்குவரத்து மருத்துவ உடற்தகுதி சான்றிதழை அச்சிடுவதை நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், உடற்தகுதி சான்றிதழை இணைய இலத்திரணியல் அமைப்பு மூலம் மோட்டார் போக்குவரத்துத் துறைக்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவ தகுதிச் சான்றிதழ்களை அச்சிடுவதற்கு அரசாங்கம் ஆண்டுக்கு ஐம்பது மில்லியன் ரூபாய்களை செலவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
