இலங்கை அபிவிருத்தியில் மத்திய கிழக்கு மோதலின் தாக்கம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்
மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையில் முன்னெடுக்கப்படும் எவ்வித கட்டுமானத் திட்டங்களுக்கும் பாதிப்பு ஏற்படாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றின் மூலம் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
உலகளாவிய சவால்கள் காணப்பட்ட போதிலும், நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் எவ்வித தாமதமுமின்றித் தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை
குறிப்பாக, மத்திய அதிவேக நெடுஞ்சாலையின்மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் தற்போது சீரான வேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொத்துஹெர முதல் ரம்புக்கனை வரையான மற்றும் அங்கிருந்து கலகெதர வரை நீண்டு செல்லும் இந்தப் பாதையின் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அமைச்சரின் கூற்றுப்படி, பொத்துஹெர மற்றும் ரம்புக்கனைக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலைப் பகுதியின் சுமார் 75 சதவீத கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்துள்ளன.
சர்வதேச ரீதியான நெருக்கடிகள்
சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் எவ்வாறாக இருந்தாலும், அனைத்து முக்கிய அபிவிருத்தித் திட்டங்களையும் திட்டமிட்டபடி உரிய காலத்தில் நிறைவு செய்வதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் நாட்டின் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைத் தடையின்றி உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |