ராஜபக்சர்களுடன் தொடர்பிலிருந்தவர்களே அநுர அரசின் முக்கிய பதவியில் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
ராஜபக்சர்களுடன் தொடர்பிலிருந்தவர்களே இந்த அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், ”தற்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சர் கிழக்கு கட்டளை தளபதியாக பதவி வகித்த காலப்பகுதியிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சாட்சியான சாரா ஜஸ்மின் காணாமல் போயுள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை
அவர் சாய்ந்தமருது குண்டு தாக்குதலில் உயிரிழந்ததாக நிரூபிப்பதற்கு கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் பாரிய முயற்சிகளில் ஈடுபட்டது. எனினும் தற்போதைய அரசாங்கம் சாரா ஜஸ்மின் உயிரிழக்கவில்லை எனக் குறிப்பிடுகின்றது.
எனவே இதில் சதித்திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதையே நாமும் தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.
இந்த தாக்குதல்களுடன் புலனாய்வுப் பிரிவிலுள்ள சிலரும் தொடர்புபட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சரும் ஏற்றுக் கொண்டுள்ளார். அவ்வாறிருக்கையில் அவர் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் போது எவ்வாறு சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க முடியும்?
அதன் காரணமாகவே நாம் அவருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தோம். எனினும் அது சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பெற்றுக் கொள்ளப்பட்ட சட்டமா அதிபரின் ஆலோசனையை சபையில் சமர்ப்பிக்குமாறு நாம் கோரிய போதிலும், அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சபாநாயகரின் தீர்மானம்
நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக் கொள்ள முடியும் என சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியதாகவே எமக்கு தகவல்கள் கிடைத்தன.
யாருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க முடியும், யாருக்கு சமர்ப்பிக்க முடியாது என்று அரசியலமைப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறிருக்கையில் சபாநாயகர் அரசியல் ரீதியான தீர்மானத்தையே எடுத்திருக்கின்றார்.
இது குறித்த விவாதம் இடம்பெற்றால் அதனால் அரசாங்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே சபாநாயகர் இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளார். அரசியலமைப்பினை பாதுகாப்பதற்கு பதிலாக தனது கட்சியைப் பாதுகாக்கும் சபாநாயகராகவே இவர் காணப்படுகின்றார்.
கடந்த காலங்களில் ராஜபக்சர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் இந்த அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். 2018ஆம் ஆண்டில் 52 நாட்கள் அரசாங்கத்தின் போது தான் தற்போதைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் கிழக்கு கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்டார்.
இவ்வாறான காரணிகள் வெளியே வரும் என்ற அச்சத்திலேயே விவாதத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
