சி.ஐ.டி விசாரணையில் பல்டி அடித்தார் விமல்: காவல்துறை தீவிர விசாரணை!
பெலியத்தே சனா என அழைக்கபட புவக்தண்டாவே சனாவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச ஒருபோதும் பார்த்ததில்லை எனவும் அவரை ஜேவிபியின் தீவிர உறுப்பினராக ஒருபோதும் அடையாளம் காணவில்லை எனவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தங்காலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையானமை தொடர்பாக காவல்துறை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெலியத்தே சனா அல்லது புவக்தண்டாவே சனா என்ற நபர்கள் தொடர்பில் விமல் வீரவன்ச அளித்த வாக்குமூலம் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணையின் காரணமாக அவரிடம் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அறிக்கை
அதன்படி, குறித்த பிரிவினரால் விசாரிக்கப்பட்டபோது, விமல் வீரவன்ச இவ்வாறு பதிலளித்ததாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்களை மேற்கொள்வது அரசாங்கம் எனவும் போதைப்பொருள் சோதனைகள் அரசின் அனுசரணையின் கீழ் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தது நிலவும் பொதுவான சூழ்நிலையின் அடிப்படையில் என விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
பெலியத்தே சனா எனப்படும் புவக்தண்டாவே சனா என்பவர் போதைப்பொருள் கொண்டு வந்த படகின் உரிமையாளர் என கூறியது அப்போது ஊடகங்கள் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையிலேயே எனவும் தெரிவித்தார்.
கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போது ஜனாதிபதி அந்தப் பகுதிக்கு பயணம் செய்தபோது, புவக்தண்டாவே சனா என்ற வீரசிங்க சரத்தின் வீட்டிற்கு வந்து உணவு அருந்தவில்லை, மாறாக அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்து உணவு அருந்தினார் என்பதை அவர் அறிந்ததாக கூறியுள்ளார்.
ஆதராங்கள் இல்லை
அதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த அறிக்கைகளை உறுதிப்படுத்த எந்தவித ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகவே, பொய்யானது என அறியப்பட்ட தகவல்களை வெளியிட்டமையால் நீதிமன்றத்தில் உண்மைகள் தெரிவிக்கப்பட்டு மேலும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் இது தொடர்பாக மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


