குளிர்பானத்தில் மயக்க மருந்து வழங்கி பெண்ணின் நகை கொள்ளை
மட்டக்களப்பில் உள்ள பிரதான பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த முதியவரான பெண் ஒருவரின் 35 இலட்சம் ரூபா பெறுமதியான நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக காத்திருந்த நிலையிலேயே இவ்வாறான ஒரு நிலையை அவர் சந்தித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வருகையில்,
மட்டக்களப்பு பேருந்து தரிப்பு நிலையம்
மட்டக்களப்பு - புதூர் பிரதேசத்துக்கு உறவினர் வீட்டிற்கு செல்வதற்கு பிரதான பேருந்து தரிப்பு நிலையத்தில் காத்திருந்த 64 வயதுடைய முதியவரான பெண் ஒருவருக்கு யுவதி ஒருவர் குளிர்பான போத்தலில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் மயங்கியதும் அவர் அணிந்து சென்ற 35 இலட்சம் ரூபா பெறுமதியான 5 பவுண் தங்க சங்கிலி 2 அரைப் பவுண் இரண்டு காப்புக்களை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை (4) பிற்பகல் இடம் பெற்றுள்ளதுடன் மயக்கமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
புதூர் பிரதேசத்திலுள்ள அவரது சகோதரியின் மகளின் வீட்டிற்கு செல்வதற்காக சம்பவ தினமான நேற்று பகல் 11.00 மணிக்கு அங்கிருந்து பயணிகள் போக்குவரத்து பேருந்து வண்டியில் ஏறி மட்டக்களப்பு நகரில் உள்ள பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு பிற்பகல் 2.00 மணியளவில் வந்தடைந்துள்ளார்.
இளம் யுவதி
இதனையடுத்து புதூருக்கு செல்வதற்கான பேருந்து வண்டி 10 நிமிடத்துக்கு முன்னர் சென்றதையடுத்து அடுத்த பேருந்து காத்திருந்துள்ளார்.
இதன்போது அங்கு மோட்டர் சைக்கிள் ஒன்றில் இளைஞன் ஒருவருடன் வந்த இளம் யுவதி ஒருவர் பேருந்து வண்டிக்காக காத்திருந்த அந்த முதியவரான பெண்ணுக்கு அருகில் சென்று உரையாடிய நிலையில், தங்க ஆபரணங்களை கழற்றி கைபையில் வைக்கவும் எனவும் இங்கு கள்ளர்கள் அதிகம் என்றும் கூறியுள்ளார்.
இதன்போது அவர் கொண்டு வந்த குளிர்பானத்தை கொடுத்து அதனை குடிக்குமாறு பல தடவை கேட்டுக் கொண்டதை அடுத்து அதனை குறித்த முதியவரான பெண் பருகியுள்ளார்.
இதன்போது அவர் மயக்கமானதையடுத்து அவரின் கைபையில் இருந்த 7 அரை பவுண் கொண்ட தங்க ஆபரணங்களை அந்த யுவதி கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளார்.
இந்த நிலையில் அங்கு மாலை 5.30 மணியளவில், பேருந்து நிலையத்துக்கு சென்ற ஒரு பெண் குறித்த முதியபெண் அங்கு கிடந்துள்ளதை அவதானித்து அவரின் உறவினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதன்போது அவரை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |