ஈரானில் ஹிஜாப் விதிகளை மீறிய பெண் : காவல்துறையினரின் தாக்குதலால் கோமா நிலைக்கு
ஈரானில் ஹிஜாப் விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளான இளம் பெண் ஒருவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவானது ஈரானின் தெஹ்ரான் சுரங்க தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் 16 வயதான அர்மிதா கரவண்ட் (Armita Garawand)என்ற பெண்ணே சிறப்பு காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் குழு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
காவல்துறை காவலில் உயிரிழப்பு
இது குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என ஈரான் நிர்வாகம் விளக்கமளித்துள்ளதுடன் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக குறித்த பெண் மயங்கி விழுந்ததாகவும், சிறப்பு பாதுகாப்பு படையினரின் தலையீடு எதுவும் இந்த விவகாரத்தில் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மட்டுமன்றி, கடந்த வருடம் ஹிஜாப் விதிகளை பின்பற்றவில்லை எனக் குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட மஹ்ஸா அமினி (Mahsa Amini) என்ற இளம்பெண் காவல்துறை காவலில் உயிரிழந்ததால் அந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதால் ஈரான் முழுவதும் பல மாதங்கள் ஸ்தம்பித்திருந்தது. அத்துடன் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பலர் தற்போது சிறையில் உள்ளனர்.
அது போன்ற ஒரு நெருக்கடி நிலை தற்போது ஏற்படாதவாறு அர்மிதா கரவண்ட் விவகாரத்தை முடித்துவைக்க ஈரான் முயற்சி செய்துள்ளதாகவும் இந்த விவகாரத்தின் உண்மை நிலைமை மக்களை சென்றடைய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பேசுபொருள்
இதேவேளை அறநெறி காவல்துறை என்று அழைக்கப்படுபவர்களால் கைது செய்யப்பட்டு உடல்ரீதியாக தாக்கப்பட்ட பின்னர் கரவண்ட் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

கடுமையான காவல்துறை காவலில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், குடும்பத்தினர் உட்பட எவரையும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கரவண்ட் இதுவரை சுயநினைவுக்கு திரும்பவில்லை என்றே சமூக ஆர்வலர் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.