நடுவானில் பறந்த விமானத்தில் பிரசவ வலியால் துடித்த பெண் - பின்னர் நடந்த சம்பவத்தால் பரபரப்பு
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவர் தனக்கு பிரசவ வலி வந்துவிட்டதாக கூறியதைத் தொடர்ந்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் விமானத்திலிருந்து 28 பேர் இறங்கி ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொராக்கோ நாட்டிலிருந்து துருக்கி நோக்கி விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது.விமானம் ஸ்பெயின் பகுதியில் பறந்துகொண்டிருந்தது. இதன்போது, திடீரென பெண் ஒருவர் தனக்கு பிரசவ வலி வந்துவிட்டதாக கூறவே, விமானம் அவசரமாக பார்சிலோனா நகரிலுள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானத்திலிருந்து தப்பியோட்டம்

அங்கு விமானம் தரையிறங்கியதும், விமானத்திலிருந்த 28 பேர் தப்பியோடிய நிலையில் 14 பேர் மட்டுமே காவல்துறையிடம் சிக்கினார்கள். இந்நிலையில், பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பது உண்மைதான் என்றும், ஆனால், அவருக்கு பிரசவ நேரம் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.
எனவே, 28 பேர் தப்புவதற்காக அந்தப் பெண் தனக்கு பிரசவ வலி வந்ததுபோல நடித்துள்ளார். ஸ்பெயின் அதிகாரிகளிடம் சிக்கியவர்களில் 5 பேர் அதே விமானத்தில் தொடர்ந்து பயணிக்க சம்மதித்ததைத் தொடர்ந்து, அவர்கள் அந்த விமானத்தில் ஏற்றி அனுப்பட்டுள்ளார்கள்.
விசாரணை வளையத்துள் கர்ப்பிணி பெண்

அந்த கர்ப்பிணிப் பெண்ணும் மற்றவர்களும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட உள்ளனராம்.
எனினும் அவர்கள் எந்த நாட்டவர்கள் என்ற தகவல்கள் அதிகாரிகள் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.